இளைஞர்கள் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களைத் தொடங்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழ்நாடு மேக்னசைட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கஜலட்சுமி தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகத் திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ஸ்டார்ட் அப் - 101 என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.லட்சுமி மனோகரி வரவேற்றார். பயிலரங்கை தொடக்கி வைத்து, தமிழ்நாடு மேக்னசைட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கஜலட்சுமி பேசியது.
ஆண்டுதோறும் 97 லட்சம் பேர் பள்ளிக் கல்வியை நிறைவு செய்கிறார்கள். இவர்களில், 38 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கிறார்கள். வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள அதே நேரத்தில், வேலைக்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கை அதற்கேற்ப உயராமல் உள்ளது. இந்த இடைவெளியை நிறைவு செய்யும் வகையில், மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது.
2016 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4,750 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுக்குள் 10,500 நிறுவனங்களை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மத்திய அரசு அதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் இந்தத் திட்டத்தை இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும், முன்னேறி 2030-ஆம் ஆண்டு 3-ஆம் இடத்தை பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உலகின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில், 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கையை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 ஆக உயர்த்துவது இளைஞர்களின் கையில் உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் நிர்வாகக்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.மதிவாணன், பேராசிரியர்கள் ஜி.யோகானந்தன், கே.என்.ஜெயக்குமார், லட்சுமி மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.