சங்ககிரியில் இலவச சமையல் எரிவாயு உருளை பெற்றுள்ள பயனாளிகளுக்கு 2 சிலிண்டர் இருப்பதாகக் கூறி பொதுவிநியோகக் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
இக்குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அதன் தலைவர் சி.ஜி. இளமுருகன் மாநில உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் முழுவதும் 138 பொது விநியோக கடைகள் உள்ளன. இக் கடைக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் இலவச சமையல் எரிவாயு உருளை திட்டத்தின் கீழ் ஒரு எரிவாயு உருளை மட்டும் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், குடும்ப அட்டைதாரர்கள் இரண்டு எரிவாயு உருளை பயன்படுத்தி வருவதாக சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலக பதிவேடுகளில் பதிவுகள் உள்ளது. இதனால் மேற்படி குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் ஒரு சிலிண்டர்தான் பெற்றுள்ளோம் என எரிவாயு முகவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்று சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும், தேவூர், மேட்டுக்கடை, காவேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
சேலம் மாவட்டம் முழுவதும் மண்ணெண்ணெய் மிக குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே ஆணையாளர் இது குறித்து விசாரணை செய்து பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய விசாரணையின் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கவும், சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் அதில் கூறியுள்ளார்.