தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஆக்டிங் டிரைவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர்,தெடாவூர், செந்தாரப்பட்டி உள்ளிட்ட பிரதான ஊர்களில் ஆம்னி, சுமோ, சைலோ, இதர கார் வகைகள் என 10 வகைகளுக்கும் மேல் வாடகைக்கு உள்ளன. இந்தப் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்டோர் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர்.
முன்பு எல்லாம் வாடகைக்கு வாகனங்கள் விடுவோர் தங்களது வாகனங்களுக்கென்று தனியே நிரந்தர ஓட்டுநர்களை வைத்திருப்பார்கள். அந்த ஓட்டுநர் வேறு வாகனங்களுக்கு ஓட்ட செல்ல முடியாது. இத்தகைய ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் தரப்படும்.
வாடகைக்குச் செல்லும்போது வாடகைக்கு எடுப்போர் நாள் படியாக தனியே ரூ. 300 முதல் தருவார்கள். மேலும் வாகன உரிமையாளர்கள், வாடகை பேசும் தொகையில் பத்து சதவீதத்தை, தங்களது ஓட்டுநர்களுக்கு அந்தந்த சவாரிக்கு உடனுக்குடன் தந்துவிடுவர்.
தற்போதைய காலகட்டங்களில் ஒரே வாகனத்தில் மாத சம்பளத்துக்கு இருக்கும் ஓட்டுநர்கள் எண்ணிக்கையானது, முக்கால்வாசி அளவு குறைந்துவிட்டது.
தற்போது ஆக்டிங் டிரைவர்களாக இருப்பது அதிகரித்து வருகிறது. ஆக்டிங் டிரைவர்கள் என்பது, எந்த ஒரு நபரிடமும் மாத சம்பளத்துக்கு வேலை செய்யாமல் யார் அழைத்தாலும் , அந்த வாகனத்தை ஓட்டிக் கொடுத்து விட்டு, குறிப்பிட்ட தொகையை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதாகும்.
இதுகுறித்து வாடகை வாகனங்கள் வைத்திருப்போர் கூறியது: ஆக்டிங் டிரைவர்களுக்கு அந்தந்த சவாரிக்கு மட்டும் சம்பளம் கொடுத்தால் போதும். மாத சம்பளம் கொடுக்கத்தேவையில்லை. அது எங்களுக்கு மிச்சம்தான் என்றனர்.
ஆக்டிங் டிரைவர்கள் கூறியது: ஒரே நபரிடம் வேலை செய்தால் அந்தக் குறிப்பிட்ட வாகனத்துக்கு சவாரி வருவதைப் பொறுத்துதான் நமக்கு வருமானம் கிடைக்கும்.
ஆனால் ஆக்டிங் டிரைவராக இருக்கும்போது மாதத்தில் கணிசமான நாள்கள் வேலை இருக்கும் என்றனர்.