சூலூர் அருகே வீடுகளின் கதவைத் தட்டி திருடி வந்த திருடனை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
சூலூர் அருகிலுள்ள லட்சுமிநாயக்கன்பாளையத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் கதவைத் தட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சனிக்கிழமை இரவு அப்பகுதியினர் இரவுக் காவலில் இருந்தனர். அப்போது ஒரு வீட்டின் கதவை மர்ம நபர் தட்டுவதை அறிந்து, அவரை மடக்கிப் பிடித்தனர். அந்த நபரை ஒரு மரத்தில் கட்டிவைத்து, ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த நபர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோபால் (28) என்பது தெரியவந்தது. இவர் அருகிலுள்ள ஒரு கோயிலில் குழி தோண்டும் ஒப்பந்தப் பணி செய்துள்ளார். அவர் வேலை முடிந்தபின் இரவு நேரங்களில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் சுல்தான்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.