கார் மீது பேருந்து மோதியதில் மூவர் இறந்த வழக்கில் இழப்பீடு தொகை வழங்கப்படாததைத் தொடர்ந்து, 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சபரி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு இரண்டு நண்பர்களுடன் காரில் சென்ற போது, எதிரே வந்த சேலம் கோட்டப் பேருந்து கார் மீது மோதியது. இதில் பல் மருத்துவ மாணவர் சபரி உள்ளிட்ட மூவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சபரி குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கோரி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதனிடையே, இழப்பீடு போதாது என தெரிவித்த சபரி குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் ரூ.30.93 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால், 10 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த சேலம் நீதிமன்ற ஊழியர்கள் கன்னங்குறிச்சி, ரயில் நிலையம் செல்லும் 10 பேருந்துகளை ஜப்தி செய்ய சென்றனர்.
அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு தினங்களில் இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.