எடப்பாடிஅருகே மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேருராட்சிக்குள்பட்ட கூடக்கல் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65), விவசாயக் கூலியான இவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2015 அக்டோபர் 23-ஆம் தேதி கோவிந்தம்மாள் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போயின. புகாரின் பேரில், பூலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் நந்தகுமார் (26) மற்றும் பக்கநாடு கிராமம், கூம்புக்காடு பகுதியைச் சேர்ந்த கணக்கன் மகன் பெரியசாமி (23) ஆகிய இவருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த மூதாட்டி கோவிந்தமாளை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி எழில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி நந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும், பெரியசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டைனையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.