ஆத்தூரில் பெரியார் சிலையை அகற்றுவது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பேருந்து நிலையம் அருகே பெரியார் வெண்கல உருவச் சிலையை நகராட்சியில் உரிய உரிமம் பெற்று சுமார் 35 வருடங்களுக்கு முன்னதாக நிறுவப்பட்டது. இதனை முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடந்த 1998-ஆம் ஆண்டு ஆத்தூர் நகராட்சி சார்பில், நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்துக்காக சாலை இரண்டாகப் பிரித்து நடுவில் சுவர் அமைத்து விளக்குப் போடப்பட்டது. அப்போது பெரியார் சிலை இருக்கும் இடத்தில் குறுகலாக சாலை ஆனது.
இந்த பெரியார் சிலைக்கு அருகில் டேக்ஸி ஸ்டாண்ட் அதிக வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக ஆத்தூர் புதுப்பேட்டை செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்றமும் இதற்காக அறிக்கை கேட்டுள்ளது. இதையடுத்து ஆத்தூர் வட்டாட்சியர் செல்வம், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆத்தூர் ஆணையாளர் க.கண்ணன் ஆகியோர் அந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.