சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையோரப் பகுதியில் 6 இடங்கள் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரியில் 1 லட்சம் கன அடிக்குஅதிகமான தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் மேடான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மாவட்டத்தில் காவிரிக் கரையோரப் பகுதியில் 6 இடங்கள் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் அரசு அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள மக்களை மேடான பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையினரை கொண்டு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன என்றார்.