தும்பல் ஊராட்சியில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட தும்பல் ஊராட்சியில் குடிநீர் மற்றும் ஆழ்துளைக் குழாய் நீர் சரிவர கிடைக்காமல் கிராம மக்கள் தினசரி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை கருமந்துறை - பேளூர், கோட்டப்பட்டி சாலை சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும், அலுவலர்களிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போலீஸார் விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.