மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பூலாம்பட்டி கதவணை நீர்த் தேக்கத்தில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும், மறுகரையில் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும் இடையே விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மாற்று போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பல்வேறு தரப்பைச் சார்ந்த, அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் தினசரி இந்த விசைப்படகு போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரியில் அதிகப்படியான உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பாதுகாப்பை கருதி வெள்ளிகிழமை முதல் இப்பகுதியில் விசைப்படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கு செல்ல, சுமார் 15 கி. மீட்டர் சுற்றுப்பாதையில் பயணிக்கும் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது.