பெரியார் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி, வியாபாரம் தொடர்பான அடைவு மையம் அமைப்பது மற்றும் உள்கட்டமைப்பு வசதி வழங்குவது தொடர்பாக நிபுணர் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் தொழில்முனைவு புதுமை முறை மற்றும் அடைவு மையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பு வசதிகள், அதற்கான வேலைகள் மற்றும் மையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான மூன்று நபர் கொண்ட குழுவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் அமைத்துள்ளது.
அந்தக் குழுவில் இணை இயக்குநர், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இணை இயக்குநர் கலைவாணி மற்றும் துறை நிபுணர்கள் மோகன் லோகநாதன், வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானம் ஆகியோர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மூலிகை மருந்துகள், சூரிய ஒளியில் இயங்கும் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள், ஜவுளி பொருள்கள் மற்றும் சேலம் பகுதியில் உள்ள இதர தொழில்முனைவோர் துறைகளிலுள்ள வாய்ப்புகளைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.பெரியார் பல்கலைக்கழத்தில் தொழில் புதுமை மற்றும் அடைவு மையம் அமைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் உறுதி அளித்தார்.
ஆய்வுக்கூட்டத்தி புதுமை முறை மற்றும் அடைவு மைய இயக்குநர் வி.ஆர்.பழனிவேலு, பேராசிரியர்கள் டி.பூங்கொடி விஜயகுமார், கே.முருகேசன், ஜி.யோகானந்தன், ஆர்.சுப்ரமணிய பாரதி, டி.அருள்பாலசந்திரன்,பி.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.