ஆத்தூர் அருகே எரிந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் ஊராட்சிக்குள்பட்ட வசிஷ்ட நதியில் அடையாளம் தெரியாத எரியூட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் குட்டையில் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அலமேலுமங்கை ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார், காவல் ஆய்வாளர் என்.கேசவன், உதவி ஆய்வாளர் ஏ.அமிர்தலிங்கம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராமர், சேகர் உள்ளிட்டோர் விரைந்து சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட ஆண் சடலத்தில் வெட்டுக் காயங்கள், தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.