ஆத்தூர் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வார்டு ஆரியாத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வார்டு ஆரியாத் தெருவில் ஆழ்துளைக் கிணறு குழாய் பழுதடைந்ததால் ஒரு மாதமாக அந்தப் பகுதியில் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் மேட்டூர் குடிநீரும் கிடைக்காததால் பொதுமக்கள், நகராட்சி அலுவலர்களிடம் புகார் செய்தனர். ஆனால் குடிநீர் விநியோகம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காலி குடங்களுடன் தேமுதிக நிர்வாகி செல்வமணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.அங்கு வந்த அலுவலர்கள் பொதுமக்களை சமாதானப் படுத்தி திங்கள்கிழமை சரிசெய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.