தம்மம்பட்டியில் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆடி மாதம் முடிந்துவிட்ட நிலையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தம்மம்பட்டியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு அனைத்துக் காய்கறிகளின் வரத்தும் வழக்கமான அளவில் இருந்து வருகிறது. ஆனால் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றின் வரத்து வழக்கத்தைவிட குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 8-க்கு விற்றது தற்போது ரூ. 15 முதல் 20 -க்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 10க்கு விற்றது தற்போது ரூ. 25 வரையும், வெண்டைக்காய் ரூ. 15-க்கு விற்றது, தற்போது ரூ. 25 வரையும் விற்பனையாகிறது. மண்டிகளுக்கு பப்பாளி வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முன்பு ஒரு கிலோ ரூ. 20-க்கு விற்றது, தற்போது ரூ. 15-க்கு விற்று வருகிறது.