கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், விவசாயிகளுக்கு விலையில்லா மரகன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது .
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட சமுத்திரம் கிராமத்தில் ஊரகவளர்த்துறையின் மரவளர்ப்புத்திட்டத்தின் கீழ், கிராமப்புற பகுதியில் பலன் தரும் பழவகை மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் நோக்கில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா உள்ளிட்ட உயர் வகை பழ மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அட்மா திட்டக் குழுத் தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான குழுவினர் விவசாயிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பழ மரக்கன்றுகளை பராமரித்து வளர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்தும், சம்மந்தப்பட்டத் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ், விவசாயிகள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.