கெங்கவல்லி அருகே வீரகனூரில் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கே. பழனிசாமி பங்கேற்க உள்ளதையடுத்து விழா நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் அதிகாரிகளுடன் வீரகனூரில் சனிக்கிழமை பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் வீரகனூரில் வரும் 14- ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சனிக்கிழமை வீரகனூர் வருந்தார். அங்கு சந்தைப்பேட்டை பகுதி, வீரகனூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதையடுத்து முதல்வர் பங்கேற்க உள்ள அரசு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தெடாவூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன், கெங்கவல்லி எம்எல்ஏ மருதமுத்து, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திகுமார், சேலம் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கூடமலைராஜா, தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பொ. பாலசுப்ரமணியம், வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி, கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நல்லுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வீரகனூர் சந்தைப்பேட்டையில் விழா நடத்துவதென்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் செய்தல் உள்ளிட்டைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.