பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல்

பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, எஸ்யுசிஐ (சி) மாவட்டச் செயலர் பி.மோகன், சிபிஐ(எம்எல்) மாநிலக் குழு உறுப்பினர் சந்திரமோகன், மாவட்டச் செயலர் கோ.மோகனசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.தங்கவேலு, கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேலு, வி,கே.வெங்கடாசலம், எஸ்.கே.சேகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனிடையே, மறியலில் ஈடுபட்டதாக போலீஸார் சுமார் 70 பேரை கைது செய்தனர்.
 இது தொடர்பாக, மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி கூறியது: விலையேற்றம், வறட்சி, வேலையின்மை போன்ற பிரச்னைகளால் தமிழக மக்கள் வாழ்விழந்து தவித்துக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு இடியாக பேருந்துக் கட்டண உயர்வை தமிழக அரசு சுமத்தியுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதிலிருந்தே இச்சுமை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
 அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் தினக்கூலி உழைப்பாளர்கள், நடுத்தர மக்கள், மாணவ - மாணவியரின் போக்குவரத்துச் செலவு இரட்டிப்பாக உயர்ந்து மூச்சு முட்டச் செய்துள்ளது. இக்கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் களத்தில் இறங்கிப் போராடிய பிறகும், தமிழக அரசு கட்டண உயர்வை முற்றாக திரும்பப் பெற மறுத்து வருகிறது.
 ஒரு கிலோ மீட்டருக்கு புறநகர் பேருந்துகளில் 42 பைசாவாக இருந்த கட்டணத்தை 60 பைசாவாக உயர்த்தி 58 பைசாவாக குறைத்துள்ளனர். அதேபோல, விரைவுப் பேருந்து, அதிநவீன சொகுசுப்பேருந்து, குளிர் சாதனப் பேருந்துக் கட்டணங்களையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தி கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. தற்போது சீசன் டிக்கெட், பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.
 போக்குவரத்து சேவையின் அத்தியாவசியத் தன்மையை புரிந்து கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசு தனது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் சரிப்படுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com