ஏரிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

வாழப்பாடி அருகே சோமம்பட்டி மற்றும் சிங்கபுரம் ஏரிகளை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்தும் பணியை

வாழப்பாடி அருகே சோமம்பட்டி மற்றும் சிங்கபுரம் ஏரிகளை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்தும் பணியை வனத் துறையினர் தொடங்கியுள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
சோமம்பட்டி மற்றும் சிங்கபுரம் கிராமத்தில் ஏறக்குறைய 85 ஏக்கர் பரப்பளவில் இரு ஏரிகள் உள்ளன. இந்த இரு ஏரிகளின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.
நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து ஏரிக்கு வரும் மழை நீரை, சீமை கருவேல மரங்களே உறிஞ்சிக் கொள்வதால், மழைக் காலங்களிலும் கூட ஏரிகளின் நீர்மட்டம் உயர்வதில்லை. அதனால், சோமம்பட்டி, சிங்கபுரம், மன்னார் பாளையம், விலாரிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் அடியோடு குறைந்து போனதால், கிணற்று பாசனத்துக்கு வழியின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி, ஏரிப் பகுதியில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளால் கிராமத்துக்குள் ஊடுரும் சீமை கருவேல மர விதைகளால், விளைநிலங்களிலும் சீமை கருவேலம் மரங்கள் ஆக்கிரமித்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்த சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்களும், தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, ஏரிகளில் நிறைந்துள்ள மரங்களை அளவீடு செய்து, அவற்றை வேரோடு அகற்றி எடுத்துச் செல்வதற்கு கடந்தாண்டு இறுதியில் ஏலம் விடப்பட்டது. 
இதையடுத்து, கடந்த சில தினங்களாக சோமம்பட்டி மற்றும் சிங்கபுரம் ஏரியில் முகாமிட்டுள்ள ஏலம் எடுத்த வியாபாரிகள், பொக்லின் இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு, சீமை கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com