செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சேலத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா, கடந்த பிப். 8-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலுக்குள்ளாகி மணிமாலா தற்கொலை செய்தார் என செவிலியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல அவரது மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என செவிலியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவி சுதா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட செவிலியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு கேட்டு முழக்கங்களை
எழுப்பினர்.
மணிமாலாவின் மரணத்துக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு பணி பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர்.