100 வழித் தடங்களை தனியாருக்கு வழங்கியதால் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு: ஏஐடியுசி சங்க பொதுச் செயலர்

அதிக வருவாய் கிடைக்கக் கூடிய 100 வழித் தடங்களை தனியாருக்கு வழங்கியதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி

அதிக வருவாய் கிடைக்கக் கூடிய 100 வழித் தடங்களை தனியாருக்கு வழங்கியதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலர் லட்சுமணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல நிர்வாக இயக்குநர் பாண்டி, கோவை மண்டலத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார்.
கொங்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிக வருவாய் கிடைக்கக் கூடிய சுமார் 100 வழித் தடங்களை அமைச்சர்கள், அதிகாரிகளின் பினாமி நிறுவனங்களான தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு வழங்கி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசிடம் ஊதியம் வாங்கிவரும் போக்குவரத்து அலுவலர்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியாருக்கு தான் சேவை செய்து வருகின்றனர்.
எனவே, சேலம் மண்டல நிர்வாக இயக்குநர் பாண்டியைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு வழங்கினால், பெரும் தொகை போக்குவரத்துக் கழகத்துக்கு லாபமாக கிடைக்கும்.
மேலும், ரூ.900 கோடி சுங்கச் சாவடிக்காக செலுத்தப்படுகிறது. இதற்கும் மத்திய அரசு சலுகை வழங்கினால், போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com