மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 5 நபர்களுக்கு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது:
தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு விரைவாக கொண்டு சேர்த்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் தகுதியுடைய மனுக்களின் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 389 மனுக்களை துறை அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியான கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் 5 பேர்களுக்கு மனு அளித்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாதம் ரூ.1,500 உதவித்தொகைகான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.