காட்டுக்கோட்டை வசிஷ்ட நதியில் மணல் கடத்தல் கும்பலை பிடிக்கச் சென்ற ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வசிஷ்ட நதியில் மணல் கடத்தப்படுவதாக ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய ஆத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் அ.அன்புச்செழியன், ஓட்டுநர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பு மகன் கண்ணன் (37) ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற துணை வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்ணன், ஓட்டுநர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் ராஜாவை தாக்கி விட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து ஆத்தூர் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் அ.அன்புச்செùழியன் ஒப்படைத்தார்.
புகாரின் பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் குமாரவேல்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.