ஓமலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியின் ஆடவர் பிரிவில் கன்னியாகுமரி அணியும், பெண்கள் பிரிவில் மதுரை அணியும் கோப்பையை வென்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஓமலூரில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்றன.
ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா கோப்பை, கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடவர் பிரிவில் 40 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும் கலந்துகொண்டு விளையாடின.
இரவு-பகல் ஆட்டங்களாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மகளிர் பிரிவில் சேலம் ஏ.வி.எஸ். அணியும், மதுரை சக்தி டைல்ஸ் அணியும் மோதின.
இதில், 18-க்கு 25 என்ற புள்ளி கணக்கில் சேலம் ஏ.வி.எஸ். அணியை வீழ்த்தி மதுரை சக்தி டைல்ஸ் அணி வெற்றிபெற்று முதலிடம் பெற்றது. இதேபோன்று ஆடவர் பிரிவில், சேலம் தேக்கம்பட்டி உதயா அணியும், கன்னியாகுமரி அனத்தங்கரை அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், கன்னியாகுமரி அனத்தங்கரை அணி 27-க்கு 32 என்ற புள்ளிகள் கணக்கில் சேலம் தேக்கம்பட்டி உதயா அணியை வீழ்த்தி வெற்றிபெற்று முதலிடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கோப்பை, தங்கப் பதக்கம் மற்றும் பரிசுத் தொகைகளை பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற மதுரை சக்தி டைல்ஸ் அணிக்கும், ஆடவர் பிரிவில் கன்னியாகுமரி அனத்தங்கரை அணிக்கும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஆடவரில் இரண்டாமிடம் பெற்ற கோவை மண்டல காவல்துறை அணிக்கும், மகளிரில் இரண்டாமிடம் பெற்ற சேலம் ஏ.வி.எஸ். அணிக்கும், மூன்றாமிடம் மற்றும் நான்காமிடம் பெற்ற அணிகளுக்கும் பரிசுத் தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.