வார்டு மறுவரையறை செய்யப்பட்டதைக் கண்டித்து குடும்ப அட்டைகளை வீசி சாலை மறியல்

சேலத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை

சேலத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை சாலையில் வீசி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 23 ஆவது வார்டுக்குள்பட்ட அம்மாசி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, வார்டு மறுசீரமைப்பில் இப்பகுதி வாக்காளர்களை, 18 மற்றும் 25 வது வார்டுகளுக்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் வாக்களிக்கவும், நியாய விலைக் கடைக்கு பொருள்களை வாங்கவும் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என புகார் தெரிவித்தனர்.
அம்மாசி நகர் அருகில் உள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஜெ. தீபா ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் என இருபிரிவாக உள்ளதால்தான் தங்களது பகுதியை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.இதைக் கண்டித்து அம்மாசிநகர் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலை அருகில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  மேலும், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 
இதையடுத்து சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். தங்களது பகுதியை மீண்டும் 23 ஆவது வார்டில் சேர்க்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com