சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் நிகழாண்டு மார்கழி மாத நிறைவுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் அருள்மிகு சோமேஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் குழுவினர் சார்பில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி (மார்கழி மாதம் முதல்நாள்) ஜனவரி 13-ஆம் தேதி வரை (மார்கழி 29-ஆம் நாள்) வரை தினசரி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனர். இதனையடுத்து மார்கழி நிறைவுநாளையொட்டி கோயில் முழுவதும் வெள்ளிக்கிழமை தூய்மைப் படுத்தப்பட்டு , மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு பூஜையையொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.