கொளத்தூர் வட்டார விவசாயிகளுக்கு அரசின் நலத் திட்டங்களை பெறவும், சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் போன்றவை பெறவும், தோட்டக் கலைத் துறை மூலம் விதை விநியோகம், நெல், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை பெறவும் சிறு, குறு விவசாயிகள் சான்று தேவைப் படுபகிறது.
இச்சான்று பெறுவதற்கு விவசாயிகள் இணையதளத்தில் பதிய வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லை. மேலும், இணையதள சேவை அடிக்கடி முடங்கி விடுகிறது என்பதால், விவசாயிகள் சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். விவசாயிகளின் குறைகளைப் போக்கி அவர்கள் எளிதில் சான்று பெறுவதற்கு வசதியாக வருவாய்த் துறை மற்றும் கௌத்தூர் வட்டார வேளாண்துறை சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கொளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு மேட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் க.மணி முன்னிலை வகித்தார். வருவாய் அலுவலர் ஆர்.செந்தில், தோட்டக் கலைத் துறை அலுவலர் குமரவேல், துணை வேளாண் அலுவலர் கோ.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொளத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 13 வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களும் முகாமில் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று, சிறு, குறு விவசாயிகளின் சான்றுகளை உடனுக்குடன் பெற்றுச் சென்றனர். இந்த சிறப்பு முகாமால் தங்களுக்கு பொருள் செலவு குறைந்ததோடு காலவிரயமும் தவிர்க்கப்பட்டது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.