மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோட்டையூர், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், பண்ணவாடி, கோட்டையூர் பரிசல் துறைகளிலிருந்து தருமபுரி மாவட்டம், நாகமரை, ஒட்டனூருக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் காவிரியைக் கடந்து செல்ல விசைப் படகு போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த இரு நாள்களாக நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீரின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. உயிரிழப்புகளும் ஏற்படும் என்பதால் வியாழக்கிழமை முதல் கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர், மேட்டூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர் வர முடியாமல் போனது. அதேபோல், கொளத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெள்ளிச் சந்தைக்கு பஞ்சு மூட்டைகள் நெருப்பூர், நாகமரை பகுதிகளிலிருந்து கொண்டுவரும் விவசாயிகள் மேச்சேரி வழியாக டெம்போக்களில் கொண்டு வந்தனர். இந்த பரிசல் துறைகளில் தண்ணீர் தேங்கும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று கொளத்தூர் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.