சேலத்தில் வெள்ளி வியாபாரியை மிரட்டி பணம் பெற்ற புகார் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) ஆய்வாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனது நண்பரான வெள்ளி வியாபாரி கோபியுடன் 30 கிலோ வெள்ளிக் கொலுசை சேலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சம்பத், வீரர் சண்முகம் ஆகியோர் வெள்ளிக் கொலுசை பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்தது.மேலும், இருவர் மீதும் சேலம் ரயில் நிலைய போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெள்ளிக் கொலுசை பறிமுதல் செய்து, அதை விடுவிக்க லஞ்சம் கேட்டு பெற்றதால் இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.