சங்ககிரி தீயணைப்புத் துறையின் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் குளம், ஏரி, ஆறுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சங்ககிரி சந்தைபேட்டை செல்லியாண்டியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மழையால் சங்ககிரி வட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், குளம் மற்றும் ஏரிகளில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பி.ராகவன் தலைமையில் வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.
இதையடுத்து, குளத்தை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் (நீதியியல்) தேன்மொழி, சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார், சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் மோகன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.