காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை அணுகி, தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.சண்முகம் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மேட்டூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 8-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆறு குழுக்களாகப் பிரிந்து பிரசாரம் செய்து வருகிறோம். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். கர்நாடக மாநிலம் இன்னமும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பெயரை கொடுக்காத காரணத்தால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
கர்நாடகம் எப்போதும் அணைகளை மூடுவதில்லை. கோடை காலத்திலும் தொடர்ந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு இருப்பதால், கர்நாடக அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பதில்லை. அதனால், மேட்டூர் அணைக்கு வரவேண்டிய தண்ணீர் உரிய காலத்தில் வராமல் தொடர்ச்சியாக 7-ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டுப் பெறுவதற்கு பதிலாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்க முடியாது என தமிழக முதல்வரே அறிவித்தது டெல்டா விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது ஒன்றும் காலதாமதம் ஆகவில்லை. சமுதாய நாற்றங்கால் மூலமாக தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டாலும், குறுவை சாகுபடியை நிச்சயம் மேற்கொள்ள முடியும். எனவே, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை அணுகி, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரைப் பெற்று குறுவை சாகுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.