சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் முதல் சென்னை வரை பசுமை வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது நிலம் கையகப்படுத்துவது தொடர்பான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சாலை தொடங்க உள்ள வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் மணியனூரில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தர்ராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.செல்வம் மற்றும் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விக்கு வட்டாட்சியர் சுந்தரராஜன் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி, கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கருத்து கேட்புக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.
இதுகுறித்து எஸ்.கே.செல்வம் கூறியது: சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டம் குறித்து அரசு அலுவலர்களுக்கே முழுமையாகத் தெரியவில்லை. அரசும் இந்த திட்டத்தின் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. மேலும், கருத்து கேட்புக் கூட்டத்துக்கு விவசாயிகள் வரக் கூடாது என்பதற்காக கைது நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்களது விவசாய நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.