சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட 18 கிராமங்களின் ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோர் ஓய்வுதியத் தொகை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்டவை குறித்து 149 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
தேவண்ணகவுண்டனூர், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூர், வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், சுங்குடிவரதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகப்பட்டி, வேப்பம்பட்டி, இருகாலூர்புதுப்பாளையம், ஊத்துப்பாளையம், சுங்குடிவருதம்பட்டி, பூச்சம்பட்டி, இருகாலூர், செல்லப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளை பொதுமேலாளர் நீதியியல் தேன்மொழி தணிக்கை செய்தார்.
வட்டாட்சியர் கே.அருள்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கணக்கு தணிக்கையின் போது உடனிருந்தனர்.
வீட்டுமனை கோரி மனு
தேவண்ணகவுண்டனூர் கிராமம், கிடையூர் அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்த மக்கள், 1977-ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாகவும், அப்பகுதியில் போதிய இட வசதி இல்லாததால் சிரமமடைந்து வருவதால் அதே பகுதியில் உள்ள இடத்தை பிரித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு மனு அளித்தனர்.