சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் ஆர்ஜிதம் செய்வதை கைவிடக் கோரி, அப்பகுதி விவசாயிகள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில், வரும் மார்ச் 25 முதல் விமான சேவை தொடங்குகிறது. இதனிடையே, விமான நிலைய விரிவாக்கத்துக்காக சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதில் ஓமலூர் காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, நிலம் ஆர்ஜிதத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர்.
இது தொடர்பாக அந்த மனுவில் தெரிவித்துள்ளது: சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஐந்து தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்காக அரசு சுமார் 570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
விவசாய நிலங்களை நம்பி தான் நான்கு கிராமங்களை சேர்ந்த 3,000 குடும்பங்கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் தான் படித்து வருகின்றனர். மேலும், படித்த வேலையில்லா இளைஞர்களும், விவசாயத்தை நம்பியே உள்ளனர். எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது. இந்த சூழலில் நிலங்களை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் சீர்கெடும்.
மேலும், அரசு எங்களின் விவசாய நிலங்களுக்குப் பதிலாக, வேறு ஏதாவது பயன்படாத நிலங்களையோ, அரசு புறம்போக்கு நிலங்களையோ கையகப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தொகையும், வேலைவாய்ப்பும் இதுவரை தரவில்லை. எனவே, நில ஆர்ஜிதம் செய்வதை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.