இளம்பிள்ளை ஏரிக்கரை ஒரத்தில் கழுத்து அறுத்து தொழிலாளியை கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளம்பிள்ளை ஏரிக்கரை ஓரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஆண் சடலம் இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் மகுடஞ்சாவடி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில், இறந்து கிடந்த அவர் அம்மன் கோயில் காடு பகுதியைச் சேர்ந்த மதனகோபால் மகன் தொழிலாளி ராஜூ (45) என்பதும், திருமணமாகாதவர் என்பதும் தெரியவந்தது,
மதனகோபால், அவரது அண்ணன் மாணிக்கம், தம்பி ராமு ஆகிய மூவரும் தனியார் வாடகை வீட்டில் வசித்து வந்ததும், இறந்த ராஜூ கடந்த 10 ஆண்டுகளாக இளம்பிள்ளை ஏரிக்கரை ஓரம் உள்ள முனியப்பன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கி வந்துள்ளதும், அவரது தாய் ஜென்னம்மாள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததும் தெரியவந்தது.
மது அருந்தும் பழக்கம் கொண்ட அவருடன் மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின்பேரில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலின்பேரில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன், டிஎஸ்பி அசோக்குமார், காவல் ஆய்வாளர் ராஜா ரணவீரன் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.
இதுதவிர, காவல் துறையின் மோப்ப நாய் மேகா துப்பு துலக்கியது. கத்தாலபேட்டை பாட்டப்பன் கோயில் தெரு, முத்தைய பண்டாரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது.