சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 43-ஆவது கோடைவிழா மற்றும் மலர்க்காட்சியை காண 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 43- ஆவது கோடைவிழா மற்றும் மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிலையில் கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் வந்தனர்.
இதனால், காலை முதல் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு மலைப் பாதையில் 2 -ஆவது வளைவு முதல் 20 -ஆவது வளைவு வரை வாகனங்கள் செல்லமுடியாமல் பலமணி நேரம் காத்திருந்தன. கோடைவிழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து செல்லும் வகையில் 50- க்கும் மேற்பட்ட கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மலைப்பாதை வளைவுகளில் போக்குவரத்து அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோர் முக்கியமான வளைவுகளில் நின்று பணியாற்றியதால் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
-ஆவது நாள் கோடைவிழா மலர்க்காட்சியை காண திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். படகு இல்லம், ஏரிப் பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ்சீட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குடும்பத்தினரோடு இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் பலர் தாங்கள் கொண்டுவந்த உணவு வகைகளை இயற்கை எழில் மிகுந்த புல்தரைகளில் அமந்து உண்டு மகிழ்ந்தனர். மலர்க்காட்சித் திடலில் மலர்களின் நடுவில் நின்று தங்களை புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
கோடைவிழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்த்தனர். மாலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குப்பனூர் மற்றும் கோரிமேடு வழித்தடங்கள் வழியாக சேலத்துக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.