சேலத்தில் அதிக விலைக்கு பொட்டலப் பொருள்களை விற்பனை செய்ததாக 2 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வாகன பழுது பார்க்கும் கடையில் பணியில் இருந்த 2 சிறார் தொழிலாளர்களை தொழிலாளர் துறை அலுவலர்கள் மீட்டனர்.
சேலம், புதிய பபேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொட்டலப் பொருள்கள் கூடுதல் விலையில் விற்கப்படுவதாகப் புகார் வந்தது. அதன்பேரில் சேலம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர் அ.ராஜகுமார் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பா.பாலசுப்பிரமணியன், கோ.ஜெயலட்சுமி, ந.மாயவன், கா.அருண் ஆகியோர் காவல் துறை பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், கூடுதல் விலையில் பொட்டலப் பொருள்களை விற்பனை செய்த 2 கடைகள் மீதும், முறையான அறிவிப்பு இல்லாத பொருள்களை விற்பனை செய்த 1 கடையின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சேலம் மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக புகார் பெறப்பட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் துணை ஆய்வர் வே.தாமோதரன், தொழிலாளர் உதவி ஆய்வர் இ.ஸ்ரீராம் மற்றும் முத்திரை ஆய்வர் மா.ராஜசேகர், ஸ்மைல் திட்ட கள அலுவலர் ஞ.யுவராஜ், சைல்டு லைன் அலுவலக களப் பணியாளர் மணிமாறன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப் பணியாளர் இந்தரஜித் ஆகியோர் அடங்கிய குழுவினரால் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வாகன பழுது பார்க்கும் கடையில் 2 சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறார்கள் இருவரும் சேலம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதையடுத்து, அவர்களை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-இன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.