வீரகனூர் அருகே இலுப்பநத்தம் கோயில் திருவிழாவில் தகராறு செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வீரகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீரகனூர் அருகே இலுப்பநத்தம் கோயில் திருவிழா நிறைவையொட்டி நடைபெற்ற ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அதில் நடனமாடிய பெண்களை பாராட்டி, அவர்கள் ஆடையில் பணம் குத்தப்போவதாக வேப்பம்பூண்டி கிராம இளைஞர்கள் மேடைக்கு சென்றனர். ஆனால், அதற்கு இலுப்பநத்தம் கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்தனர். அப்போது, இரு கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அவர்களை விரட்டினர்.
அதைத் தொடர்ந்து, இரு கிராம இளைஞர்களுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் வேப்பம்பூண்டியைச் சேர்ந்த ஸ்டாலின் (21), பரமேஷ்வரன் (23), இலுப்பநத்தத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி , வேப்பம்பூண்டியைச் சேர்ந்தவர்கள் தலைவாசல்-வீரகனூர் சாலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன்.கார்த்திகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக முடிவு ஏற்படாததையடுத்து நள்ளிரவு 1.30 மணிக்கு சாலைமறியல் செய்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. அதில் மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, வேப்பம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர்(பொ) முத்தையா கொடுத்த புகாரின் பேரில், சாலை மறியல் செய்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வீரகனூர்போலீஸார், தலைமறைவானவர்களை தேடிவருகின்றனர்.