ஓமலூர் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் கத்தரிக்காய் விலை இருமடங்காக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் கத்தரி அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாராபுரம், பூசாரிப்பட்டி, டேனிஷ்பேட்டை, கே.மோரூர் உள்பட பல்வேறு கிராமங்களிலும் தற்போது கத்தரிக்காய் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த காய்கறிகளை விவசாயிகள் ஓமலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தினசரி சந்தை மற்றும் சேலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, வெயில் தாக்கம் மற்றும் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், கத்திரிக்காய் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கத்தரிக்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் 30 கிலோ அடங்கிய ஒரு சிப்பம் கத்தரி ரூ.230-க்கு விற்பனையானது. தற்போது ரூ.420 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.