சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான ஆயத்தப் பணிகள் ஆய்வுக்குழுக் கூட்டம் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு விழாக்குழு தலைவர் சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை வகித்து, தற்போது நடைபெற்று வரும் பணிகள், செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். கும்பாபிஷேக விழாவுக்கான நிதியில் பொதுமக்கள் பங்களிப்பு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கோயில் நிலங்களை முழுமையாக அளவீடு செய்து, சுற்றுச்சுவர் கட்டுவது குறித்து குழு உறுப்பினர்களிடத்தில் ஆலோசனைகளை வழங்கினார்.
சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார், செயல் அலுவலர் விஸ்வநாதன், சங்ககிரி அதிமுக ஒன்றியச் செயலர் என்எம்எஸ்.மணி, நகரச் செயலர் ஆர்.செல்லப்பன், விழாக்குழு துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
முன்னதாக சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார். விரைவில் இக்கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்டவும், அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.