துப்புரவுப் பணியாளரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி முற்றுகை

ஓமலூர் அருகே துப்புரவுப் பணியாளரை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள்

ஓமலூர் அருகே துப்புரவுப் பணியாளரை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஓமலூர் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.
ஓமலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை நேரு நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகள் பிரித்து எடுக்கப்படுகிறது.
ஓமலூரில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வரும் கோவிந்தன் (49), நேரு நகரில் திடக்கழிவு மேலாண்மை குப்பைக் கிடங்கு பகுதியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை செய்து கொண்டு இருந்தார். பிரித்தெடுக்கும் குப்பைகளை உடனுக்குடன் பேரூராட்சி செயல் அலுவலருக்கு புகைப்படம் எடுத்து அனுப்பும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில் உரக்கிடங்கில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளே சென்று திரும்பியுள்ளனர். அப்போது, அவர்களையும் சேர்த்து துப்புரவுப் பணியாளர் கோவிந்தன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதை பார்த்த அந்த மூன்று நபர்களும் எதற்கு புகைப்படம் எடுத்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். பின் கோவிந்தனை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.
இதையறிந்த துப்புரவுத் தொழிலாளர்கள் கோவிந்தனை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, துப்புரவுத் தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து கோவிந்தனிடம் புகார் மனு பெற்று நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். காயமடைந்த கோவிந்தனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com