நங்கவள்ளி அருகே டிப்பர் லாரியும், அரசு நகரப் பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.
மேச்சேரியிலிருந்து அரசுப் பேருந்து திங்கள்கிழமை மாலை மேட்டூர் நோக்கி சென்றது. ஊஞ்சப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே அதிவேகமாக செம்மண் பாரம் ஏற்றி வந்த டிப்பார் லாரி அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த மலையடிப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி சரஸ்வதி (35), அமிர்தலிங்கம் மனைவி நீலா (50), கிருஷ்ணன் மனைவி ஆனந்தி (60), தெத்திகிரிபட்டியைச் சேர்ந்த கூத்தகவுண்டர் மகள் தாரணி (9) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் லாரி ஓட்டுநர் வீரக்கல்லை சேர்ந்த கோபிநாத் (35) மீது நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.