பிளஸ் 2 தேர்வில், சேலம் மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்வெழுதிய 1,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88 சதவீதத் தேர்ச்சி ஆகும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அம்மாப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி, குகை மகளிர் மேல்நிலைப் பள்ளி, மணக்காடு காமராஜ் நகரவை மேல்நிலைப்பள்ளி, பாவடியில் உள்ள மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என 7 பள்ளிகளைச் சேர்ந்த 1,363 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 252 மாணவர்கள், 952 மாணவிகள் என மொத்தம் 1,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 88 சதவீதமாகும். சுமார் 55 மாணவ, மாணவிகள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.