சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஐ.என்.டி.யூ.சி. மாநிலச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வீ.கா. நல்லமுத்து வரவேற்றார். செயல் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கேரளா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ.350 போல தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொழிலாளர் பணிபுரியும் இடத்தில் வழங்கப்பட வேண்டும், தேயிலை தோட்டத் பெண் தொழிலாளர்கள் 15 கிலோ எடைக் கொண்ட இயந்திரத்தில் தேயிலை கொழுந்து வெட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும். தோட்டத்தொழிலாளர்கள் ராசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க செல்லும்போது பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர் குடியிருப்புகள் சீரமைக்கப்படவேண்டும் எனவும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்படாத ஆயிரம் பணியிடங்களை நிரப்பபட வேண்டும் எனவும், துறைமுக ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, மீனவர்களுக்கு அரசு வழங்கப்படும் மானியம்போல உப்பு உற்பத்தியாளர்களுக்கும் மானியம் வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜெகநாதன்,பொதுச் செயலாளர் இளவரி,களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.