ஓமலூர் அருகே குறைந்த அளவு பெட்ரோல் விற்பனை செய்ததாக பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஓமலூர் அருகே சின்ன திருப்பதி காருவள்ளி கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் பெட்ரோல் அளவு குறைத்து விநியோகிப்பதாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் சிலர், தங்கள் வாகனத்துக்குத் தவிர ஒரு லிட்டர் பெட்ரோலை பாட்டிலிலும் அடிக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் பாட்டிலில் அடிக்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் கிராம மக்களுக்கும், நிலைய ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர், பாட்டிலில் பெட்ரோலை அடித்துள்ளனர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பதிலாக 750 மில்லி லிட்டர் மட்டுமே நிரம்பியது கண்டறியப்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். போலீஸார் முன்னிலையில் பெட்ரோல் அடித்தபோதும் குறைந்தளவில் பெட்ரோல் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு இதுகுறித்து புகார் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.