கோடி கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத பெருநிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பேசியதாவது:
வங்கி ஊழியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக கடந்த அக்டோபர் மாதம் முடிவு செய்யப்பட்டும், இதுவரை வங்கி நிர்வாகங்கள் கிடப்பில் போட்டுள்ளன. மேலும், வங்கி பணியில் காலியாக உள்ள 3 லட்சம் காலி இடங்களை நிரப்ப வேண்டும்.
மேலும், நாடு முழுவதும் தனியார் பெருநிறுவனங்கள் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்றுக் கொண்டு கடனைத் திருப்பி செலுத்தாமல் உள்ளன. அதுபோன்ற நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வங்கி நிர்வாகங்களும் முன்வர வேண்டும்.
சுமார் ரூ.1.70 லட்சம் கோடிக்கு மேலாக உள்ள நிலுவை கடன் தொகையை வசூல் செய்வதை விட்டுவிட்டு மீண்டும் அந்த நிறுவனங்களுக்கு மென்மேலும் கடன் வழங்கும் போக்குக் கண்டிக்கத்தக்கது என்றார்.