மனைவியை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது

சேலத்தில் மனைவியை கிரைண்டர் ஆட்டுக் கல்லால் தாக்கிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலத்தில் மனைவியை கிரைண்டர் ஆட்டுக் கல்லால் தாக்கிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகில் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவரது மனைவி பரமேஸ்வரி (38). இவர்களுக்கு ரோகித் (7), பிரியதர்ஷன் (4) என்ற மகன்கள் உள்ளனர்.
ரோகித், நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 2- ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.
லாரித் தொழில் நடத்தி வந்த சரவணன் அத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், மின் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தனது தந்தை  மாணிக்கத்துக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை பெற்று அதில் குடும்பத்தை நடத்தி வந்தார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக சரவணனை வேலைக்குச் செல்லுமாறு மனைவி பரமேஸ்வரி வற்புறுத்தி வந்தாராம். இதனால் கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமையும் கணவர், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆவேசமடைந்த சரவணன் அருகில் கிடந்த கிரைண்டர் ஆட்டுக் கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த பரமேஸ்வரி நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸார் நிகழ்விடத்துக்கு  விரைந்து வந்து பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கடன் தொல்லையால் சரவணன் மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகி இருந்தார் என்றும், ஆவேசமடைந்ததால் மனைவியைக் கொலை செய்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து, சரவணனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com