பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓமலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் ஓமலூர் சக்திவேல், காடையாம்பட்டி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓமலூர் நகரத் தலைவர் மாரியப்பன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் சாமானிய மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதைக் க ட்டுப்படுத்த வேண்டிய அரசுகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் தொடர்ந்து மக்களின் வருவாயை சுரண்டி வருகின்றன. மக்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.