சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அஸ்தம்பட்டி மண்டலம், வார்டு 14-க்கு உள்பட்ட குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கைகழுவுதல் மற்றும் 5 சதவிகிதம் லைசால் கிருமி நாசினி கொண்டு மருத்துவமனை வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார். பின்னர் சூரமங்கலம் மண்டலம் வார்டு 23-க்கு உள்பட்ட முல்லைநகர் பகுதியில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலம் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வழங்கும் இடம், பயணிகள் நடைபாதை ஆகிய இடங்களில் 5 சதவிகிதம் லைசால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அலுவலர்கள் அப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் பி.கே.கோவிந்தன், சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு, சேலம் மேற்கு வட்டாட்சியர் தீபசித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.