சேலம் அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்து மருத்துவமனை, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம், காகாபாளையம், வேம்படிதாளம் ரயில்வே பாலம் அருகில் எட்வின் ராஜ் மனைவி சரோஜா (69) என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மருத்துவக் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன், மருத்துவர் நடராஜன் மற்றும் சேலம் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் வளர்மதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இதில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துள்ள சரோஜா, கடந்த 1972 -ஆம் ஆண்டு முதல் 1976 வரை சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததைக் கண்டுபிடித்தனர். இப்பகுதியில் கருக்கலைப்பு, கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிதல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களை இவர் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இவரது கணவர் எட்வின் ராஜ் மருத்துவமனையின் அருகில் மருந்துக் கடை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸார், போலி பெண் மருத்துவர் சரோஜாவை கைது செய்தனர். மேலும், சேலம் தெற்கு வட்டாட்சியர் ஜாகீர் உசேன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மருத்துவம் பார்த்து வந்த வீடு மற்றும் மருந்துக் கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.