வாழப்பாடியில், அ.தி.மு.க. 47-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். சதீஷ்குமார் தலைமை வகித்தார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் ஏ.பி.மணி வரவேற்றார். ஆர். இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்காடு கு.சித்ரா, ஆத்தூர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது :
எதிர்க்கட்சியினர் இதுவரை 32 ஆயிரம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். எத்தனைத் தடைகள் வந்தாலும், அவற்றை முறியடிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடைக்கோடி மனிதருக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் கொண்டு சேர்த்து வருகிறார்.
சிலர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது. நோய்வாய்ப்பட்டிருந்த கட்சியை மருத்துவராக வந்து அவசர சிகிச்சை அளித்து எடப்பாடி பழனிசாமி காப்பற்றினார்.
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏக்கள் தினகரனை நம்பிச் சென்று பதவியை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குபாய் (எ) கே.குபேந்திரன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், முருகேசன், நகரச் செயலர் சிவக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மெடிக்கல்ராஜா, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அனிதா பழனிமுத்து, பேரூராட்சி முன்னாள் தலைவி செல்வி ரவி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் நீலமேகம், ஜெயராமன், பேளூர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.